Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

கல்யாணம் என்பது குதிரை பந்தயம் மாதிரி
வாழ்கையை பணயம் வைத்து
இருவர் இணைந்து
தத்தம் கனவுகளை
துரத்தி கொண்டு ஓடும் ஓட்டம்


நீண்ட பயணம்
இலக்கு எதுவென்றும்
எதுவரை என்பதும்
ஓடுபவருக்கும் ,ஒட்டுபவருக்கும் தெரியாத புதிர்

ஒன்றாய் ஓடுவது மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது
நீங்கள் யாரோடு ஓடினாலும்
கணக்கில் வைத்து கொள்ளவேண்டியது
காதலும், நம்பிக்கையும் தான்–அடுத்தவரின்
கடந்த காலம் அல்ல


வெற்றி , தோல்வி எல்லாம்
வேகமாய் முந்தி கொண்டு செல்பவர்க்கு அல்ல
வேதனையோ ,சாதனையோ
மாறாத அன்பும் – அதை மறக்காது சொல்லவும்
மற்றவரிடம் செலுத்தவும் செய்கிற அதிர்ஷ்டசாலிகளுக்கே

நொண்டி குதிரையோ
சண்டி குதிரையோ
சிலருக்கு எதுவாயினும் ஓட்ட தெரியும்
தார் சாலையோ ,மண் தரையோ
சிலருக்கு எங்கேயும் ஓட தெரியும் ..

எதுவுமே தெரியாமல் ஓடி ஜெயித்தவர்களும் உண்டு
எல்லாம் தெரிந்தும் கோட்டை விட்டவர்களும் உண்டு

கூரையை பிய்த்து கொண்டு கொட்டுகிற
குருட்டு தசை தேவையில்லை தான்…
சகலமும் இருந்த போதும்
சிலருக்கு மட்டும்
சரியான வகையில் நியாயமே கிடைப்பதில்லை

முரண்பாடுகள் எங்கேயும் உண்டு தான்
நேற்று நினைத்த எண்ணத்துக்கும்
இன்றைய நம் எண்ணத்துக்குமே வேறுபாடுகள் உண்டு..
எங்கோ பிறந்து … எங்கோ வளர்ந்து
நம்மோடு வாழ வருகிறவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ??

காலம் தான்
இருவருக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தும்
ஒரு இனிய சாட்டை

ஒத்து வரவில்லை என்றால்
ஒதுங்கி கொள்ளலாம் என்று
உலகம் முழுக்க …விதவிதமாய் சட்டங்கள் உண்டு
ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து மட்டுமல்ல
விடாது கொடுத்தும் வாழலாம் என்பதை
ஏட்டு புத்தகங்கள் சொல்வதில்லை என்றும்

போட்டியோ பந்தயமோ என்று தந்திரத்தை கொண்டு
வெகு நாட்கள் தேரிழுக்க முடியாது ..
உண்மையாய் உள்ளத்தை பகிர வேண்டிய
கட்டாயமே களத்தில் உண்டு

முற்றும் துறந்த முனியாவதை விட
எல்லாவற்றிலும் சிக்குண்டு
வாழ்வை செலுத்துவதே
இதன் அறம்

என்ன நடந்த போதும்
குதிரையும் ,ஓட்டுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
வெற்றி தோல்வி எல்லாம் வேடிக்கை பார்க்க வந்தோர்க்கு இல்லை
அடித்து கொண்டாலும் ,
அழுது
, பின் அலுத்து கொண்டாலும்
பாதிப்பு என்னவோ பங்கெடுத்து கொண்டோர்க்கு தான்

அடிப்படையில் ஆதாரத்துக்கு
பெரும்
சேதாரம் இல்லையென்றாலும் ,
வளர்ப்பின் கோளாறாய்
அது பெற்றெடுத்த பிள்ளைகள் வாழ்வில் பிரதிபலிக்கும்

சின்ன சண்டைகள் ,பெரிதாய் கோபங்கள்
ஈட்டி முளைத்த வார்த்தை பரிமாற்றங்கள் ..
சில காயங்கள் ..மௌனங்கள்
தவறில்லை தான்
கெஞ்சலும், கொஞ்சலும் வந்தால்
சமாதானத்தில் மனம் நிறைந்து போகும் ஒரு நாள் …

நினைத்ததை வெளிபடுத்தாமல் ,
சகித்து கொண்டு பொய்யாய் தான்
வாழ்தல் கூடாது …
சுயத்தை இழந்த பின் சுதந்திரம் எப்படி வரும் ?
உருவத்தை எரித்தபின் உயிரை எவ்விடம் தேட?

யார் மேலே ,யார் கீழே என்பதுவும்
அடக்குமுறைகளும் , எதிர்ப்பு போராட்டங்களும்
தீர்ப்புக்கு வராது கடைசியில்
ஆண் பெண் என்ற பேதம் அற்று
காதலாகி , கலந்துருகி நிற்பது !!!

(ஒரு ப்ரமச்சர்யா இதை எழுதியாச்சு ….. நம்பிக்கையோடு எதிர்கொள்கிறேன் வரும்காலத்தை )

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்…. மாலை வேளைகளில் வீட்டில் இருந்த எருமை மாடுகள் இரண்டையும் பக்கத்தில் இருந்த ரயில்வே யார்டுக்கு … மேய்த்து கொண்டு வர ,அம்மா ஓட்டி போயி விடுவார்கள் …நடுவில் வீட்டு வேலை செய்ய வர வேண்டுமெனில் என்னை தான் அழைத்து , கொஞ்ச நேரம் எருமைகளை பார்த்து கொள்ள சொல்வார்கள் ..

கூட்ஸ் ரயில்கள் மட்டுமே செல்லும் பாதை….ஆதலால்
கூட படிப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் மிகுந்த ரகசியமாய்
கொஞ்ச காலம் அந்த வேலையை செய்து கொண்டிருந்தேன் ….

படிக்கிற பிள்ளை என்று… அம்மா புஸ்தகத்தை எடுத்து கொண்டே போக சொல்லி விடுவார்….நாம பரிட்சைக்குன்னு உட்கார்ந்தாலே படிக்க மாட்டோம் ……

அப்படி தான் அன்றும் போனேன் …..
எருமை அதன் பாட்டுக்கு மேய்ந்து கொண்டிருந்தது … எனக்கு புத்தகத்தை திறந்து படிக்க விருப்பமில்லை… சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்
அப்பாவோ மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார் …..அங்கே ..
நகர்ந்து கொண்டிருந்த ஒரு இன்ஜினில் ஏறி சிக்னல் கொடுத்து கொண்டிருந்தார் …எனக்கோ ஆர்வம் அதிகமாகி …அவரை போலவே தாவி மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த அந்த ரயில் இன்ஜினின் ஒரு கூட்ஸ் பெட்டியில் ஏற முயற்சி செய்தேன்..கொஞ்சம் தடுமாறி விட்டாலும் அப்படியே சமாளித்து ஏறி விட்டேன் …யாரும் பார்க்கவில்லை என்று நான் நினைத்து கொண்டதன் விளைவு … சடாரென எல்லாமே நின்றது …யாரோ அப்பாவின் பெயரை சொல்லி சத்தமாக கூப்பிட்டார்கள் ..
நான் ஏறிய இடத்துக்கு வெகு அருகில் அப்பாவின் மேலதிகாரி நின்று கொண்டிருந்திருப்பார் போலே… அவர் நான் ஏறியதை கண்டு பயந்து
விட்டார் … சத்தம் போட்டு அப்பாவை அழைத்து புகார் கொடுக்க ஆரம்பித்து விட்டார்…
“என் மகன் கூட இவ்வளவு குறும்புத்தனம் பண்றது இல்லே .. உங்க பொண்ணு என்ன பண்றா பாருங்க ?… சரி இங்க எதுக்கு அவ வந்தா ?……
அப்பாவோ… “இல்லே சார் .. எருமை மேயுது … அப்படியே பார்த்துக்க சொல்லி நான் தான் சொன்னேன் .”… என்று விளக்கி கொண்டிருந்தார்…
அவ்வளவு தான் .. அதுவரை திட்டி கொண்டிருந்தவர்… என்னை புகழ ஆரம்பித்து விட்டார்…
“பரவாயில்லையே…….இந்த சின்ன வயசில் “…. என்று…..ஏதேதோ ..சொல்லி பாராட்டி கொண்டிருந்தார் ….
“இல்லே சார் ! வீட்டுலே இருந்தா… படிக்கணுமே …. இப்படி வந்து கொஞ்ச நேரம் எருமையை பார்த்துகிட்டா …. இதே இன்ஜினில் ரெண்டு ரவுண்டு அப்பா கூட்டி போவார்…..” என .. அவரிடம் சொல்ல தான் முடியுமா
அந்த மனுஷன் அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை ….வீட்டில் ..வீதியில் என ஒரு கொள்கையோடு ,என் புகழை பரப்பவும் ஆரம்பித்து விட்டார்..

அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனால் … கிளாஸ்க்குள் நுழைந்தவுடன் நம்ம புகழ் தான் … மானாவாரியாய் ஓட்ட ஆரம்பித்திருந்தனர் …….
“எல்லாரும் ஆபிசர் மக்கள் ……ஏழுமணிக்கு எழுந்திருப்பவர்கள் … என் வீட்டு வேலை… நான் பகிர்ந்து செய்கிறேன்” என்று சொன்னால் புரியவா போகிறது ….
இந்த கேலி தொடர ஆரம்பித்து விட்டது ….நாட்கள் செல்ல செல்ல அதிகமாகி விட்டது ….

ஒரு நாள் விளையாட்டு நேரத்தில், கேலிகள் பொறுக்க முடியாமல் கோபித்து கொண்டு அருகே இருந்த மரத்தடியில் உட்கார வந்தேன் ……
அப்போது தான் நான் அவளை பார்த்தேன் ….கணக்கு பாடம் எழுதி கொண்டிருந்தாள்

வெளியில் நடந்தவற்றை பார்த்து கொண்டிருந்தாள் போலும்
“என்ன விளையாட போகலியா “….என்றவாறே சிரித்தாள் ..
“என்ன கேலி செய்யறியா”
“எதுக்கு ” என்பது போல் ஒரு நிமிடம் என்னை பார்த்தாள்..
பின் எழுதுவதை தொடர்ந்தாள்
“அதான் எருமை மேய்கிரன்னு எல்லாரும் சிரிக்கிறார்களே” …….என்றேன்

“இதுலே என்ன இருக்கு…?
உங்க வீட்டுலே இருக்கு நீ மேய்க்கிரே
எங்க வீட்டுலே இருந்திருந்தா நானும் அதைத்தானே செய்வேன் ……”
என்றவாறே … எழுதி கொண்டிருந்தாள்

அவள் தான் ….அவளின் அந்த வார்த்தை தான் ….. நான் அவளை நட்பாய்….ஏற்று கொள்ள செய்தது …அதுவரை யாரையுமே வா என்று என் வீட்டுக்கு அழைக்காத நான் …அவளை வாரந்தோறும் வரவேற்க ஆரம்பித்திருந்தேன். …

ஜனவரி மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை ……
நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்லுக்கு வெகு அருகில் தான் வள்ளுவர் கோட்டம் இருந்தது…

எங்களுக்கு பிடித்தமானது பெசன்ட் நகர் பீச் என்றாலும்… எப்போதும் கூட்டமாய் வரும் பஸ்சின் நெரிசலில் மிதிபட்டு…போயி சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்
சரி .. பஸ்சுக்கு செலவழிக்காமல் போவது தானே …என்று கிளம்பி ஆயிற்று …
டிக்கெட் வாங்கி கொண்டு ,உள்ளே போயி பார்த்தால் வழக்கம் போல் …நம் மக்கள்(சகாக்கள்) யாரும் வரவில்லை …
சரி என்று நுழைவாயிலை ஒட்டி இருந்த படிக்கட்டு ஓரம் உட்கார்ந்து … மற்றவர்களுக்காய் காத்திருக்க ஆரம்பித்தோம் . காத்திருந்த நேரத்தில் தான் அவள் ஆர்வமாய் சொன்னாள்..
“நாம ஏன் இங்கே நிற்கனும்?அப்டியே கொஞ்சம் நடந்திட்டு வரலாமே … அவங்க எல்லாரும் வந்தவுடனே அப்புறம் பொறுமையா உள்ளே போயி சுத்தி பார்க்கலாம் “
வாகனங்களின் இரைச்சலும் ,ஜன சந்தடியும் நிறைந்த சென்னை போன்ற நகரங்களில் இது போன்று ஒரு இடம் மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தது …
யாரும் பார்த்து பார்த்து நட்டு வைக்காமல் ….அழகுப்படுத்தாமல்….சமீபத்தில் பெய்த ஒரு மழையால் ….புற்கள் ஏராளமாய் வளர்ந்து அந்த இடத்துக்கு ஒரு பசுமையை கொடுத்திருந்தது …

காற்றும் வெளிச்சமும் சரியாய் வராத அறை ஒன்றில் தங்கி இருந்த எங்களுக்கு…..(சத்தியமாய் எனக்கு ஏதும் தோணலை… முன்னாடியே ஒத்துக்கிறேன் )மரங்களும் அந்த செடிகளும் பார்வைக்கு இதமாய் இருந்தன ….
ஏதோ கவிதை எழுதுகிற …சரி விடுங்க அவ எதுவும் எழுதினதில்லை
தியானத்தில் இருந்து திடீரென கண் விழித்த சாமியார் அவருடைய சீடனை பார்த்து …..கேட்கிற மாதிரி …ஆர்வமாய் என்னை பார்த்து கேட்டாள் “
“ரொம்ப நல்ல இருக்குல்லே “
இந்த இடத்தை பார்த்தால் உனக்கு என்ன தோனுது?”….

கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னேன்…
” எவ்ளவோ புல்லு … எங்க வீட்ல இருக்கிற எருமையை கொண்டாந்து விட்டா … எப்படி மேயும் தெரியுமா … நம்ம ஊருலே எங்க போயி இப்படி புல்லை பார்க்கிறது ……”!!!!!!!!!!!!!!!!!!!!! என நான் தொடர்ந்து கொண்டிருந்தேன் …..

(இவ்வாறு யதார்த்த சிந்தனையோடு பேசிய நான் பொழுதுபோக்காய் என்ன வேலை செய்து கொண்டிருந்தேன் என்று உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை )

கடவுளையே நினைத்திராத மனிதர்களுக்கும்
காலையும் மாலையும் இரு வேளை
பூஜை செய்த பக்தனுக்கும்
பொதுவானது மரணம்…..

கட்டங்கள் போட்டு
வானியலும் ….மண்ணியலும்..கணித்து
வருங்காலம் சொன்னாலும்
இன்ன திசை …
இந்த மார்க்கம்
இந்த நாள் வந்து சேரும்
என எவரும்
எதிர்பார்க்க முடியாதது
ஊகங்களில் தேர் செலுத்த முடியாதது
மரணம் என்கிற மாண்புமிகு நெறி

இலங்கையில் செத்தாலும்
ஈராக்கில் செத்தாலும்
கங்கையில் செத்தாலும்
ஒவ்வொரு மரணமும்…
உயிரோடிருப்பவனை பார்த்து
உயிர் கொலை தவறு
சொல்,செயல் என
அடுத்த மனிதனுக்கான
வன்முறை தவறு என்பதை
உரக்க சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது

மெத்த படித்தவர் எல்லாம்
மேதாவி என்ற பட்டம் கொண்டவர் எல்லாம்
அடுத்தவன் மரணத்தில் அரசியல் செய்து
தனக்குண்டான லாபத்தை பங்கு பிரிக்கையில்
மறந்தும் யோசிக்காத நியாயம்
மரணம்
இவர்கள் பின்பற்றும் …
ஞானம் கெட்ட சாஸ்திரங்கள்
நிம்மதி தருவதில்லை

நாளும் கிழமையும்
நல்ல நேரமும்
பார்த்து பார்த்து
பஞ்சாங்கத்தோடு வாழ்ந்தாலும்
இந்துவுக்கும்
இஸ்லாமியனுக்கும்
மதங்களை கடந்து …
மரணம் மட்டும்
சமமாய் வரும்….
பிறந்த குழந்தைக்கும்
பேர பிள்ளைகள் கண்ட முதியோனுக்கும்
பேதம் கற்பிக்காது
வரும்….
வருகிற போது
சொல்லாமல் கொள்ளாமல் தான் வரும்

கடமைகளை கழுத்து வரை சுமந்து கொண்டிருப்பவனுக்கோ பொறுப்பில்லாதவனுக்கோ
அவகாசம் சிறிதும் கொடுக்காது
அவசரமாய் அழைக்க வரும்
மறந்து விடாதீர்கள்
எது நடந்த போதும்
எப்படி நடந்த போதும்
மரணம் எல்லாருக்கும் பொதுவானது…

வயதும், வாழ்க்கையும் ஓடுகிற ஓட்டத்தில்
விஞ்ஞானம் வான் தொட்ட நாட்டிலும்
இயல்புகள் மாறி விடவா போகிறது….
எவ்விடத்தும் மரணம் தான்
மாறாத கடவுள்

வாழ்கையை உணர
மரணம் தந்த சலுகை…மருத்துவம் ..
தள்ளி போடுவதற்கும்
தாமதபடுத்துவதற்கும்
மருந்துகள் கண்ட …கல்வி

அந்தஸ்து ,அதிகாரம்
பதவி , பணம்
அத்தனைக்கும் அசராத வித்தை… மரணம்

சக மனிதன்
மரணத்தை சந்தித்த சந்தர்ப்பங்கள்
சொல்லி கொடுக்கிறது
வாழ்வின் சில கட்டாயங்களை

யார் செத்தும் யார் போயும்
எழுப்பி கொணர முடியாது என்பதே
உண்மை

மனிதன் வகுத்த
இந்த சம்பிரதாயங்கள்….
பிறப்புகள் தீர்மானிக்கும்
உறவுகள் ,உரிமைகள்..

சமுதாயத்துக்கான சட்டங்கள்
மனிதன் படைத்த கடவுள்…
காதல், கல்யாணம்
இவற்றில் எவை வேண்டுமானாலும்
காலத்தால் பொய்யாய் போகலாம்…
மரணம் பொய் ஆவதில்லை
எப்பொழுதும்

அமராவதி அமரர் ஆனார் — மார்ச் ,2009
அமராவதி -அம்மாவின் சகோதரர்

பெண்ணாய் பிறந்ததற்காய்
ஒரு நாளும் வருத்தப்படாத என்னை
இன்று வருத்தப்பட வைத்தவர்
பெற்றவளை ஒரு நாளும் கண்ணீர் வடிக்க விட கூடாது
என்று இருந்த என்னை
என் கடமை உணர்ச்சியை
குற்ற உணர்ச்சியாய் மாற்றித்தான் போனது
அவர் மரணம்

கடைசியாய் ஒரே முறை
அவர் முகத்தை பார்க்காமல் போனதற்காய்
நாளும் ,பொழுதும்
அழுது புலம்பி ஆத்திரபடுகிறாள்
எதை செய்து அவள் சோகம் தீர்க்க ??
காலம் இருக்கிறது காயங்கள் ஆற்ற

மகனாய் பிறந்திருந்தால்
மற்ற சாஸ்திரங்கள் அனைத்தும்
தூக்கி எறிந்து விட்டு
அவள் சார்பாய் கடமை செய்ய போயிருப்பேன்
செய்ய முடியாத காரியத்துக்கு
சொல்ல கூடாது .. சொந்த காரணங்கள்

மனைவிக்கு முன்னால்
கணவன் போக வேண்டும்
அவள் பிறந்த வீட்டு கடமை தீர்க்க

பெற்றவருக்கு முன்னால்
பிள்ளைகள் போக வேண்டும்
காரியங்கள் ஆற்ற….

நாளும் கிழமையும்
நல்ல நேரமும்
பார்த்து பார்த்து
பஞ்சாங்கத்தோடு வாழந்தாலும்
மரணம் மட்டும்
வருகிற போது
சொல்லாமல் கொள்ளாமல் தான் வரும்

மறந்து விடாதீர்கள்
எது நடந்த போதும்
எப்படி நடந்த போதும்
மரணம் எல்லாருக்கும் பொதுவானது…

பெண்ணை பெற்றதால்
பெண் மீது வைத்த பாசத்துக்கு,
அவள் எதிர்காலத்துக்கு ….
எத்தனை விலை கொடுக்கிறாள் அம்மா

கட்டிய கணவன்
தடை சொல்லவில்லை அவளை ….
பேர் சொல்லவும்
போவென்று உரிமையோடு அனுப்பவும்
ஒரு மகனை பெற்று வைக்கவில்லை என்று கலங்குகிறார்

பெற்ற மகள்கள் ஏதும் பேசவில்லை
வாயுள்ள ஊமைகள் …
அவர்தம் உறவுகள் இதோ……..

ஒரு தொலைபேசி அழைப்பு
“நீங்க போறது நல்லதில்லை , என் மனசுக்கு இது திருப்தியாக இல்லை என்ன செய்வது எனக்கும் வருத்தமாக தான் இருக்கிறது.. “
“நாங்களும் போகலை ,கோயிலுக்கு நேர்ந்துகிட்டு இருக்கோம் “
என்று மருமகன் அஸ்திரம் வீசுகிறார்

ஆறுதல் சொல்லுங்கள்
என்று கணவன்மார்களை
கையெடுத்து கும்பிட்டு கெஞ்ச வேண்டி இருக்கிறது

எத்தனை எடுத்து சொன்னாலும்
அப்புறம் என்று
நிதானமாய் தள்ளி போடுகிறார்கள்
எப்போ பேசினா தான் என்ன .?…
என்பதாய் தோன்றும் போலிருக்கிறது

மனைவி என்று வருகையில்
அடுத்தவன் மகள் என்றே அலட்சியமோ
அவளெல்லாம் ரத்தமும் சதையும் கொண்டு
உணர்ச்சி மிக்க
உயிராய் பிறக்கவில்லை என்ற நியாபகமோ
யாரை கேட்பது ?

பெண்மக்கள் ஜீரணித்து கொள்ள முடியாத நிஜம்
மனைவிக்கும் பெற்றவர்கள் இருப்பார்கள்
பெரும் பாசத்தோடு வளர்த்திருப்பார்கள்
என்பதை
தாலி கட்டியவுடன்
எல்லா ஆண்மக்களும் மறப்பது தான்

மறந்து விடாதீர்கள்
மரணம் எல்லாருக்கும் பொதுவானது

அடிப்பதும் கொல்வதும் தான்
வன்முறை என்று
யாரேனும் சொன்னால்
அந்த கருத்தை மறுக்கிறேன்
என்னை மன்னியுங்கள்

அடுத்தவர் அழுகையில்
ஏன் என்று கேட்காததை
எழுந்து கண்ணீர் துடைக்க வராததை
என்னவென்று சொல்லுவது ?
நாகரிகமான வன்முறைகள் …. என்றா

கவலை படாதீர்கள் ஆண்மக்களே
இது ஒரு குமுறல் …..மட்டுமே
குறை கூறுதல் இல்லை …
மறதி என்ற ஒன்று
இந்த மாதிரி விசயத்தில்
மனைவிகளுக்கு இல்லாது போனால்
எவரும் கணவன் என்று அருகே நிற்க முடியாது

மறந்து விடாதீர்கள்
மரணம் எல்லாருக்கும் பொதுவானது

அண்ணன் ,தங்கை என்பதெல்லாம்
வயதும், வாழ்க்கையும் ஓடுகிற ஓட்டத்தில்
மாறி விடவா போகிறது….
இல்லை.. மரணம் தான் மாற்றி விட போகிறதா

இங்கே பாசத்தை
அவர்கள் சொல்லிகொண்டதில்லை என்பதை தவிர
பெரிதாய் ஒன்றுமில்லை
வாரத்தில் இரு நாட்களாவது வீட்டுக்கு வந்து விடுவார்
“இந்த வழியா வாக்கிங் போனேன் அப்படியே
வள்ளியம்மாவை பாத்துட்டு போலாம்னு வந்தேன்” என்பார்
சாப்பிடுகிற விசயத்தில் இருந்து
சாஸ்திரங்கள் வரை எல்லாவற்றிலும்
விவாதம் பண்ணி கொண்டு தான் இருப்பார்கள்
அண்ணனும் தங்கையும்

ஆண்பிள்ளை என்கிறதால்
சலுகைகள் அதிகம் கொண்டு வளர்ந்தான்
என அம்மா வாதிட்டு கொண்டிருப்பாள்

ஆனால் பிள்ளைகள் நாங்கள் எதிர்த்து பேசி விட்டால்
காலத்துள் அடங்காது
அவன் செய்த நன்றி ………
அதை எப்போதும் மறக்க கூடாது என
கடந்த காலத்தை விவரிப்பாள் ……

காவியம் படைக்கிற பாசமில்லை தான்
ஆனால் நன்றி மறப்பது நன்றில்லை தானே

“நீங்கள் போயிருக்கலாம்”
“போக வேண்டாம்னு யாரு சொன்னாங்க “
கேள்விகளுக்கோ ,
“நானா சாக சொன்னேன்” என்ற
உங்கள் கோபத்துக்கோ
பதில் இல்லை….
குற்றம் சாட்டுதலும் இல்லை
எங்களிடம்…..

பெண்ணை பெற்றவன்
எவ்வளவு பாவம் செய்தவன் என்பதை
இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்
சொல்லி கொடுக்கிறது பாடங்களை

யார் செத்தும் யார் போயும்
எழுப்பி கொணர முடியாது என்பதே
உண்மை

மனிதன் வகுத்த
இந்த சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்
பிறப்புகள் தீர்மானிக்கும்
உறவுகள் ,உரிமைகள்..

வைபவங்கள்,விழாக்கள்
கடவுள்
காதல், கல்யாணம்
இவற்றில் எவை வேண்டுமானாலும்
காலத்தால் பொய்யாய் போகலாம்…

மரணம் பொய் ஆவதில்லை
எப்பொழுதும்

பிறந்த நாள்

நாம் செய்து கொண்டிருப்பதை ,
ஓடி கொண்டிருப்பதை
ஒரு கணம் நிறுத்தி விட்டு
நிதானப்பட ……….
இல்லாததை நினைத்து..
படும் வருத்தங்கள் நடுவே
இருத்தலே இனிதென கொண்டாட
காலம் கொடுக்கும் ஒரு வாய்ப்பு

சந்திக்கும் முன்

நாம் சந்திக்கும் முன்
உன்னை தொலைத்ததாய் நியாபகம் இல்லை எனக்கு
இருந்தும் ….
என்னை
ஏன் அடையாளங் காண முடியவில்லை உன்னால் ?

எப்போது பெங்களூர் போனாலும்
இப்படி ஒரு நாள் ,ரெண்டு நாள் லீவுல்யே போகிறாயே ……..
ஒரே நாளுலே ஊரை சுத்தி பார்த்துர முடியுமா ???
இவர்களுக்கு என்ன தெரியும் ???
இந்த ஊருக்குள் நீ இருக்கிறாய் என்பது தானே இவர்கள் நினைப்பு …
என்னை பொறுத்தவரை ……………………
இந்த ஊரே உனக்குள் தான் இருக்கிறது …
நான் என்ன ஊரை சுற்றவா வருகிறேன்…
உன்னை சுற்ற தானே

முதல் முறையாக சென்னை கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்த போது
நண்பன் ஒருவன் சொன்னான் ..
“நாளைக்கு காலையில் சென்னை போயி இறங்க போறே… அங்கே ரயில்வே ஸ்டேஷன் ரொம்ப பெரிசா இருக்கும்… பார்த்து பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி பிரமிச்சு … நிக்காதே ..”
ஆனால்
அந்த அக்டோபர் மாதத்தின் காலை………….
நான் சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி நடந்த போது ,
பெரிய அதிசயமாய் எதுவும்
என் கண்ணுக்கு தெரிந்திருக்க வில்லை
காரணம் …என்னுடன் நீ !!!!!!!
உன்னை விட
என்னை
பிரமிக்க வைக்கிற ஏதேனும் ஒன்று
இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன.. ???

வகுப்பறையில்

M.Sc Maths 1st year Class-
பாடம் : Sql Server 2000

அமாவாசைக்கும் ,அப்துல் காதருக்குமான சம்பந்தம் —அந்த வகுப்பு..
கல்லூரியில் கட்டிய காசுக்கு…. விதியை நொந்தவாறே உட்கார்ந்திருந்தனர் . நானோ வகுப்பறையில் ..எந்த தலைப்பை எடுக்க ஆரம்பித்த போதும் கரும்பலகையில் படம் போட்டு விளக்கியும் …எழுதியும் போட்டு… பாடம் நடத்தி கொண்டிருந்தேன் …
எழுதி போட்டதை அவர்கள் எல்லாம் எழுத கொஞ்சம் நேரம் கொடுத்தேன் .. பின்பு முன் வரிசையில் உட்காந்திருந்த ஒரு மாணவனை பார்த்து
“போர்டு-ல இருக்கிறதை அழிச்சிரட்டுமா ? ” என்றேன்
அவன் சாவதானமாக சொன்னான் ..
“நீங்க எழுதறிங்க .. நீங்க அழிக்கறிங்க.. அதை ஏன் என்கிட்டே கேக்கறிங்க”
????? ????????????

பழைய பதிவுகள் »