கல்யாணம் என்பது குதிரை பந்தயம் மாதிரி
வாழ்கையை பணயம் வைத்து
இருவர் இணைந்து
தத்தம் கனவுகளை
துரத்தி கொண்டு ஓடும் ஓட்டம்
நீண்ட பயணம் …
இலக்கு எதுவென்றும்
எதுவரை என்பதும்
ஓடுபவருக்கும் ,ஒட்டுபவருக்கும் தெரியாத புதிர்
ஒன்றாய் ஓடுவது மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது…
நீங்கள் யாரோடு ஓடினாலும்
கணக்கில் வைத்து கொள்ளவேண்டியது
காதலும், நம்பிக்கையும் தான்–அடுத்தவரின்
கடந்த காலம் அல்ல
வெற்றி , தோல்வி எல்லாம்
வேகமாய் முந்தி கொண்டு செல்பவர்க்கு அல்ல
வேதனையோ ,சாதனையோ
மாறாத அன்பும் – அதை மறக்காது சொல்லவும்
மற்றவரிடம் செலுத்தவும் செய்கிற அதிர்ஷ்டசாலிகளுக்கே
நொண்டி குதிரையோ
சண்டி குதிரையோ
சிலருக்கு எதுவாயினும் ஓட்ட தெரியும்
தார் சாலையோ ,மண் தரையோ
சிலருக்கு எங்கேயும் ஓட தெரியும் ..
எதுவுமே தெரியாமல் ஓடி ஜெயித்தவர்களும் உண்டு
எல்லாம் தெரிந்தும் கோட்டை விட்டவர்களும் உண்டு
கூரையை பிய்த்து கொண்டு கொட்டுகிற
குருட்டு தசை தேவையில்லை தான்…
சகலமும் இருந்த போதும்
சிலருக்கு மட்டும்
சரியான வகையில் நியாயமே கிடைப்பதில்லை
முரண்பாடுகள் எங்கேயும் உண்டு தான்
நேற்று நினைத்த எண்ணத்துக்கும்
இன்றைய நம் எண்ணத்துக்குமே வேறுபாடுகள் உண்டு..
எங்கோ பிறந்து … எங்கோ வளர்ந்து
நம்மோடு வாழ வருகிறவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ??
காலம் தான்
இருவருக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தும்
ஒரு இனிய சாட்டை
ஒத்து வரவில்லை என்றால்
ஒதுங்கி கொள்ளலாம் என்று
உலகம் முழுக்க …விதவிதமாய் சட்டங்கள் உண்டு
ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து மட்டுமல்ல
விடாது கொடுத்தும் வாழலாம் என்பதை
ஏட்டு புத்தகங்கள் சொல்வதில்லை என்றும்
போட்டியோ பந்தயமோ என்று தந்திரத்தை கொண்டு
வெகு நாட்கள் தேரிழுக்க முடியாது ..
உண்மையாய் உள்ளத்தை பகிர வேண்டிய
கட்டாயமே களத்தில் உண்டு
முற்றும் துறந்த முனியாவதை விட
எல்லாவற்றிலும் சிக்குண்டு
வாழ்வை செலுத்துவதே
இதன் அறம்…
என்ன நடந்த போதும்
குதிரையும் ,ஓட்டுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
வெற்றி தோல்வி எல்லாம் வேடிக்கை பார்க்க வந்தோர்க்கு இல்லை
அடித்து கொண்டாலும் ,
அழுது , பின் அலுத்து கொண்டாலும்
பாதிப்பு என்னவோ பங்கெடுத்து கொண்டோர்க்கு தான்
அடிப்படையில் ஆதாரத்துக்கு
பெரும்
சேதாரம் இல்லையென்றாலும் ,
வளர்ப்பின் கோளாறாய்
அது பெற்றெடுத்த பிள்ளைகள் வாழ்வில் பிரதிபலிக்கும்
சின்ன சண்டைகள் ,பெரிதாய் கோபங்கள்
ஈட்டி முளைத்த வார்த்தை பரிமாற்றங்கள் ..
சில காயங்கள் ..மௌனங்கள்
தவறில்லை தான்
கெஞ்சலும், கொஞ்சலும் வந்தால்
சமாதானத்தில் மனம் நிறைந்து போகும் ஒரு நாள் …
நினைத்ததை வெளிபடுத்தாமல் ,
சகித்து கொண்டு பொய்யாய் தான்
வாழ்தல் கூடாது …
சுயத்தை இழந்த பின் சுதந்திரம் எப்படி வரும் ?
உருவத்தை எரித்தபின் உயிரை எவ்விடம் தேட?
யார் மேலே ,யார் கீழே என்பதுவும்
அடக்குமுறைகளும் , எதிர்ப்பு போராட்டங்களும்
தீர்ப்புக்கு வராது கடைசியில்
ஆண் பெண் என்ற பேதம் அற்று
காதலாகி , கலந்துருகி நிற்பது !!!
(ஒரு ப்ரமச்சர்யா இதை எழுதியாச்சு ….. நம்பிக்கையோடு எதிர்கொள்கிறேன் வரும்காலத்தை )